புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

குழந்தைகளுக்குத் தேவை பணமா ? தன்னம்பிக்கையா?









           பணமா ?தன்னம்பிக்கையா?
ணக்காரர்களுடைய குழந்தை,   பணக்காரனாகவே வளர்கிறது. ஏழையுடைய குழந்தை ஏழையாகவே வளர்கிறது. அதே போல உங்கள் குழந்தை,  நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படித் தான் வளர்கிறது. ஓர் உதாரணம் பார்ப்போம்.



    உங்களிடம், பர்ஸில் 100 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருக்கிறது . யாருக்கு, பணம் கொடுக்க வேண்டும் என்றாலும் 100 ரூபாய் நோட்டுக்களாகத் தான் கொடுப்பீர்கள்.



    உங்களிடம், பர்ஸில் 10 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் இருந்தால் உங்கள் குழந்தைகள் கேட்டால் உங்களால் 10 ரூபாய்களாகத் தான் கொடுக்க முடியும்.


     உங்களிடம் உள்ளதைத் தான் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க முடியும் என்றால் உங்களிடம் அதிகம் உள்ளது நம்பிக்கையா ? பயமா ?
கவனித்துப் பாருங்கள், குழந்தைகள் முதலில் கேட்கும் பெரும்பாலான வார்த்தைகள் பெற்றோர்களின் பயத்திலிருந்து உதிர்த்த வார்த்தைகள் தான். ‘ஓடாதே, விழுந்திடுவ’.
‘அத எடுக்காத, உடைச்சிடுவ ‘


       நாம் நம் குழந்தைகள் தரையில் நடப்பதையே பயத்தோடு பார்க்கிறோம். ஆனால் கழைக் கூத்தாடிகள் தங்கள் குழந்தைகளை கயிற்றில் நடக்கவே பழக்கப் படுத்தி விடுகிறார்கள்.
    

          நம்பிக்கை இருப்பதால் அவர்கள் கயிற்றில் நடக்கவே உற்சாகப் படுத்துகிறார்கள். பயம் இருப்பதால் நாம் தரையில் நடப்பதற்கே தடை விதிக்கிறோம்.



    உங்களிடம் செல்லாத அல்லது கிழிந்த ஐந்நூறு ரூபாய் இருக்கிறது என்றால் உங்கள் குழந்தைகளுக்கு அதை அப்படியே கொடுப்பீர்களா? அல்லது அதை நல்ல நோட்டாக மாற்றிக் கொடுப்பீர்களா ?
      

      பணத்தை மாற்றிக் கொடுப்பது போல உங்கள் பயத்தை, தைரியமாக மாற்றிக் கொடுங்கள்.
நிச்சயம் அவர்கள் ஜெயிப்பார்கள்.

       பணம் , தோற்றம்,  நிறம்,  உடல் நலம் மட்டுமல்ல பழக்க வழக்கங்களும் பெற்றோர்கள் தரும் சொத்துக்கள் தான். பழக்க வழக்கங்கள் பெற்றோர்களைப் பார்த்து பார்த்து குழந்தைகளுக்கும் படிமானமாகி விடுகிறது.
எனவே, உங்கள் மேனரிசங்கள் கூட உங்கள் சொத்துத் தான். நீங்கள் பிரித்துக் கொடுக்காமலேயே உங்கள் குழந்தைகளிடம் சேர்ந்து விடுகிறது.
ஆக, உங்கள் நற்பெயர் கூட உங்கள் குழந்தைக்கு சொத்துத் தான்.
சொத்து வேண்டாம் ; சொற்கள் போதும்.


  
       பணத்தை சேர்த்து வைத்து செலவழிப்பது போல உங்கள் சொற்களும் சிந்தனைகளாக குழந்தைகளால் சேமிக்கப் பட்டு பிறகு செயல்களாக செலவழிக்கப் படுகிறது.


       எக்ஸாம் நேரத்தில், ‘எனக்கென்னமோ நீ நல்ல
மதிப்பெண் எடுக்கிற மாதிரி தெரியலை’ என்றால் பதட்டத்தையும் பயத்தையும் உங்கள் சொத்தாக உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.
ன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ வெற்றி பெற பிறந்திருக்கிறாய் என்ற நம்பிக்கை வார்த்தைகளை நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கொடுத்தால் அதை தன்னைப் பற்றிய உயர்வு அபிப்ராய சிந்தனைகளாக மாற்றி உங்கள் குழந்தைகள் சேமித்துக் கொள்ளும். பிறகு நம்பிக்கையோடு செயலாற்றும். ஆக நீங்கள் தரும் பணம் மட்டு மல்ல, நீங்கள் சொல்லும் சொல்கூட சொத்து தான்.
அதற்கு, பணத்திற்கு பதிலாக, நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் முதலில் நீங்கள் சம்பாதியுங்கள். அப்போது தான் அதை குழந்தைகளுக்கு கொடுக்க முடியும்.


    லட்சங்கள் அல்ல லட்சியங்களே சொத்து
பல பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையே குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கத் தான் என்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகளின் எதிர் காலத்திற்கு பொருளீட்டுகிற அவசரத்தில்                    குழந்தைகளின் நிகழ் காலத்தை மிதித்துக் கொண்டே ஓடிக் கொண்டிருப்பார்கள்.


       குழந்தைகளுக்கு சொத்து சேகரிக்க செலவிட்ட நேரத்தில் பத்தில் ஒரு சதவீதத்தை குழந்தைகளுக்கு அதை பராமரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்க செலவிட்டிருந்தால் எல்லாக் குழந்தைகளும் ஜெயித்திருக்கும்.


        புரிந்து கொள்ளுங்கள். முன்னேற நாம் அளிக்கும் லட்சங்கள் அல்ல, வாழ்வில் வழி காட்டும் லட்சியங்களே நாம் நம் குழந்தைகளுக்கு தர வேண்டிய சொத்து.


     உங்கள் குழந்தைகள் கேட்கும் சொத்து
நம் அப்பா நமக்கு எவ்வளவு சொத்து தரப் போகிறார் என்று எந்த குழந்தையும் யோசிப்பதில்லை. ஆனால் நம்மோடு இன்று நேரம் செலவிடுவாரா? நம்மோடு மனம் விட்டு பேசுவாரா ? என்று தான் எதிர் பார்க்கிறார்கள்.


      குழந்தைகளுக்கு பணம் சேர்க்கும் நேரத்தில் கொஞ்சத்தை அவர்கள் எதிர்பார்க்கும் நேரமாகவே கொடுங்கள்.
                      நன்றி
               புதுமை விரும்பி























No comments:

Powered by Blogger.